Friday, November 25, 2011

ஈழத்துச் சிதம்பரம்

ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் சுந்தரேஸ்வரர் கோயில் அல்லது காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10 மைல் தொலைவில் உள்ள காரைநகரிலே திண்ணபுரம் பிரிவிலே அமைந்துள்ளது.சிதம்பரத்திலே நடைபெறுவது போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் இந்த திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுவதால் அது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்பட்டு வருகின்றது.

வரலாறு

இது 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே அமைக்கப்பட்டது. ஈழத்துச் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு சுந்தரேசுவரர் என்றும் அம்பிகைக்குச் சௌந்தராம்பிகை என்றும் பேர். இக்கோயில் தொடக்கத்தில் ஆண்டி கேணி ஐயனார் கோயில் என்றே அழைக்கப்பட்டது. ஐயனார் கோயிலை அமைப்பதிலே முன்னின்ற அம்பலவி முருகர் என்ற பக்தரே பின்பு சிவன் கோயிலை அமைப்பதிலும் முன்னின்றவர்.

கோயில் அமைப்பு

இங்குள்ள ஐயனார் பூரணை, புட்கலை சூழ அமர்ந்துள்ளார். சிவனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஐயனாருக்கும் அளிக்கப்படுகின்றது. சிவனுக்குக் கோபுரம், சித்திரத்தேர் உள்ளது போல ஐயனாருக்கும் தனியே கோபுரம், சித்திரத்தேர் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கமூர்த்திக்குப் பரிவார தெய்வங்களாக அம்பாள், நடேசர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சமயகுரவர் என்போர் எழுந்தருளியுள்ளனர்.

விசேட உற்சவங்கள்

இத்திருக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் மிகப் பிரசித்தி பெற்றது திருவெம்பாவை உற்சவமாகும். நடராஜர் இரதாரோகணமும் ஆர்த்திராபிஷேகமும் குறிப்பிடத்தக்கவை. அபிஷேகத்தன்று மாலையில் திருவூடல் நடைபெறும்.பங்குனி உத்தரத்தில் நிறைவடையும் படி சிவபெருமான் திருவிழா பத்துத் தினங்களும்ஆடிப்பூரத்தில்  நிறைவடையும் படி அம்பாள் திருவிழா பத்துத் தினங்களும் நடைபெறுகின்றன.தைப்பூசம்,   மாசி மகம், ஆவணி சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகைத் தீபம்என்பனவும் விசேடமாக இங்கு போற்றப்படுகின்றன.

No comments:

Post a Comment